தஞ்சாவூர்: தஞ்சை முனிசிபல் காலனியில் நடந்த சிறப்பு முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது.
இதற்காக நகரப் பகுதிகளில் 128, ஊரகப் பகுதிகளில் 1481 என மொத்தம் 1609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் 5819 பணியாளர்கள் 178 மேற்பார்வையர்கள் பணிபுரிந்தனர்.
தஞ்சை முனிசிபல் காலனி அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமில் குழந்தைகளுக்கு தஞ்சாவூர் எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நிகழ்ச்சியில் ஆணையர் கண்ணன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனையில், பஸ், ரயில் நிலையங்கள் கோவில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.