கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி பேரூராட்சியில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. தென்னை விவசாயம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் தொடர்பான பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு கல்வி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய பழனி நகராட்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட ஆலோசனைக் கடிதம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொள்ளாச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொள்ளாச்சியை மாவட்டமாக அங்கீகரிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.