திருச்சி: தமிழகத்தில் சமீப காலங்களாக போதைப்பொருட்கள், கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணியிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்ததால், தஞ்சை சேர்ந்த அப்துல் அமீர் கைது செய்யப்பட்டார். இவர் இந்த கஞ்சாவை யாருக்கு கொண்டு வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் ஆழத்துலவில் விசாரித்து வருகின்றனர்.
இதில் சில மணி நேரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமான பயணியிடம் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அரிய இன ஆமைக்குஞ்சுகள் டப்பாக்களில் அடைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2,477 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அனைத்து குஞ்சுகளும் ஒப்படைக்கப்பட்டது.
ஒரே நாளில் உயர்தர கஞ்சாவும், பெருமளவு ஆமைக்குஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் இரு வழக்குகளையும் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.