கோவை: கோவை திருச்சி சாலை சுங்க போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிய பஸ்கள் இயக்கம், பணியின் போது இறந்த 41 தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், பெயின்ட் உற்பத்தி ஆலையில் கூடுதல் இயந்திரங்கள் இயக்குதல், நடமாடும் தானியங்கி பணிமனை வாகன திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகத்தில் 2700 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், கருணை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்ட உள்ளது. பெண் நடத்துனர்களின் உயரம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியானது. பெண் நடத்துனர்களின் உயரத்தை 10 செ.மீ குறைக்க முதல்வர் உத்தரவிட்டார்.

ஓட்டுநர் பணியிடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 11,000 புதிய பேருந்துகள் பெறப்பட்டு ஜூலை மாதத்திற்குள் இயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படாது. இது தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கேரளா மற்றும் கர்நாடகா மாநில போக்குவரத்து கழகங்களை விட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அகில இந்திய அளவில் 19 விருதுகளை வென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.