
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதில் இருந்த 14 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர்.

வியாழக்கிழமை காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டோ, மெஜோ ஆகிய இரு படகுகளை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இரண்டு படகுகளில் இருந்த ரிபாக்சன், ராஜா பிரபு, அரவிந்த், ராபின்சன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பேட்ரிக் நாதன், ஜோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 67 தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து, 529 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.