நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர் ஆனந்துக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் அதிவேக படகில் வந்து, கத்தி முனையில் அவர்களைத் தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர்.
இதேபோல், செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், வெள்ளப்பள்ளம் மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த சுமதி மற்றும் மாணிக்கவேல், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த துர்காதேவி ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி, அவர்களின் பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். இந்த 5 தாக்குதல்களிலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாகை கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக 5 படகுகளைத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.