சென்னையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கை தொடுப்பவர்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றுதான் நீதிமன்றம் கூறியுள்ளது என்று அதிமுக வழக்கறிஞர் இன்பத்துரை தெரிவித்தார்.
டாஸ்மாக் தற்போது தமிழகத்தில் சில்லறை மதுபான விற்பனையை மேற்கொண்டு வருகிறது. தனியார் மது நிறுவனங்களின் பாட்டில்கள் அதிக விலையில் விற்கப்படுவதும், கணக்கில் காட்டாமல் பணம் பரிமாற்றம் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன.
சென்னை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று, 8ஆம் தேதி வரை சில இடங்களில் தொடர்ந்தது. இந்த சோதனையை சட்ட விரோதமாக அறிவிக்கக்கோரி டாஸ்மாக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
டாஸ்மாக் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ஐ 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய மனைவியிடமும் விசாரணை நடந்தது. ரத்தீஷ், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

ரத்தீஷ் மற்றும் விசாகன் இடையிலான உரையாடலுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆகாஷ் பாஸ்கரன் திரைத்துறையில் இந்த முறைகேடான பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்பது விசாரணை முழுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது என்றபடி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது மட்டுமே தடை உள்ளது.
அதாவது, ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் மீதான விசாரணை தொடரலாம். இவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தடையில்லை.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த திரைப்படங்களில் நடித்தவர்கள், நடிகைகளையும் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.