தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 12 பேரின் உடல்களை போலீசாரே அடக்கம் செய்தனர்.
தஞ்சை மாநகரில் நகர கிழக்கு , மேற்கு , தெற்கு, கள்ளப்பெரம்பூர் மற்றும் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 12 பேரின் உடல்களை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம்.
அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உடல்களை உரியவர்கள் வந்து தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோர வேண்டும். இல்லையெனில் இறந்தவர்களின் உடல்கள் ஆதரவற்ற சடலங்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும். அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உள்ள 12 உடல்களை ஆதரவு கோரி யாரும் வராததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமை காவலர்கள் குருமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மணிகண்டன், தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பிரேத பரிசோதனை கூட பணியாளர்கள் ஆகியோர் அந்த 12 உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து 12 (8 ஆண்,4 பெண்) பேரின் உடல்களை அடக்கம் செய்ய இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து அந்த 12 பேரின் உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம் வடக்குவாசலில் உள்ள ராஜாகோரி மயானத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தனித்தனியாக குழிகள் தோண்டப்பட்டு, 12 உடல்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் இதுவரை ஒரு வருடத்தில் தஞ்சை மாநகரில் 126 உடல்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறுகையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத உடல்கள் அதிகம் உள்ளது. இவர்கள் வீட்டை விட்டு வந்தவர்களாக இருக்கலாம் அல்லது வந்த இடத்தில் உயிரிழந்து அவர்களது உறவினர்களால் அடையாளம் தெரியாத வகையிலும் இருக்கலாம். எனவே அவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அந்த உடல்களை அடக்கம் செய்வோம். அந்த வகையில் நேற்று 12 பேரில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு உரிய இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நான் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 84 உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளேன். அதேபோல் இந்த வருடத்தில் மருத்துவக் கல்லூரி காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் 126 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.