சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில், இந்த வதந்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார். மாணவர்கள் திரும்பும் நாளிலேயே பாடநூல்கள் வழங்கப்படும் வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
மேலும், ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக செயல்படுத்தப்படும் எனவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய ‘ஜூன் 9’த் தகவல் குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்புக் குழு அறிக்கை வெளியிட்டு, இது ஒரு வதந்தி என உறுதி செய்துள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் தவறான தகவலால் குழப்பமடைய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 2ஆம் தேதியன்று திறக்கப்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.