நாகப்பட்டினம்: பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் நேற்று காலை முதல் அவசர அவசரமாக கரை திரும்பினர். வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற பெரும்பாலான மோட்டார் படகு மீனவர்கள் நேற்று அதிகாலை அவசரமாக கரை திரும்பினர். அவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. மழையில் நனைந்த அவற்றை மீன் வியாபாரிகள் காலையில் ஏலத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.