சென்னை: ஓராண்டு தடை… முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைசுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ, ஷவர்மா போன்றவை இளம் தலைமுறையினரை அதிகளவு கவர்ந்துள்ளது. வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள மையோனைஸ் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: மயோனைஸ் தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி, சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம். உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்கள் அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.
ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடைபிடிக்க வேண்டும். மயோனைஸை சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.