கோவை: கோவையில் குட்டையாக தேங்கி நின்ற தண்ணீரில் யானைகள் குளியல் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த யானைகளை காட்டுக்குள் துரத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் வழி தவறி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை கீரணத்தம் ஐ.டி பார்க் பகுதியில் மூன்று யானைகள் சுற்றித் திரிந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர். தொடர்ந்து அங்கு இருந்த குட்டையில் இறங்கி யானைகள் நீரில் விளையாடி உற்சாக குளியல் போட்டன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் குளியல் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.