இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்… குவியும் வாழ்த்துக்கள்
சென்னை,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளில் அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தில் வரும் ‘புது வெள்ளை மழை’ என்ற பாடல் இன்றும் அதே ரசனையுடன் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்போதும் பலரது செல்போன்களில் இந்தப் பாடல் ரிங்டோனாக இடம் பிடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்ததற்காக, உலகத் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றார். இப்படத்தின் ஜெய் ஹோ பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு மற்றொரு விருது வழங்கப்பட்டது. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏஆர் ரஹ்மான் பெற்றார்.
ஏ.ஆர்.ரகுமான் இதுவரை 6 தேசிய விருதுகள், 32 திரைப்பட தயாரிப்பாளர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கார் விருதுகள், கிராமி விருதுகள் என எண்ணற்ற விருதுகளை வென்று இசை உலகில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. தம்பதிக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் அமீன் இசை பயிற்சி செய்து வருகிறார்.