16,325 அடி உயரத்தில் உடைந்து விழுந்த விமான கதவு
போர்ட்லேண்ட்: அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஒன்று போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு நேற்று மாலை கிளம்பியது. 16 ஆயிரம் அடி உயரத்தை எட்டியபோது விமானத்தின் ஒரு பக்கத்தில் கதவு திறந்தார்போல பெயர்ந்து வானில் பறந்தது. வெளிக்காற்று உள்ளே புயலென பாய்ந்ததில், கேபின் அழுத்த மாறுபாடு காரணமாக விமானப் பயணிகள் அலறினர் விமானம் நிலைகுலைந்தது.
சமயோசித விமானி உடனடியாக செயல்பட்டு, விமானத்தை அது கிளம்பிய விமான நிலையத்துக்கே திருப்பினார். இதன் மூலம் 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை கொண்ட அந்த விமானம் மீண்டும் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. நாடுவானில் விபரீதம் நேரிட்டபோது விமானத்தின் பயணிகள் அனைவரும் அவசர உதவிக்கான ஆக்சிஜன் மாஸ்க் உதவியால் சுவாசிக்கத் தலைப்பட்டனர்.
நல்வாய்ப்பாக பயணிகளில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. குறிப்பாக விமானத்தின் ஒரு பகுதி சுவர், பெயர்ந்த இடத்தையொட்டிய இருக்கைகள் பயணிகள் எவருமின்றி காலியாக இருந்ததாலும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலிருந்த ஒருசில இறக்கைகள் ஆகாயத்தில் பறந்து சென்றன. இந்த விபரீதத்தை வீடியோ எடுக்க முயன்றதில் பல பயணிகள் தங்களது செல்போன்களை நடுவானில் பறிகொடுத்தனர். திரைப்படக் காட்சி போல அரங்கேறிய விபத்தின் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உலகின் பிரபல விமானங்களில் ஒன்று போயிங் 737. எனினும் அண்மைக்காலமாக அதன் மீதான பாதுகாப்பு குறைபாடுகள் பொதுவெளியில் சர்ச்சைக்கு ஆளாகி வருகின்றன. 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் நேரிட்ட இரு போயிங் விமான விபத்துகளில் 346 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவை தொடர்பான வழக்குகளில் பல பில்லியன் டாலர் இழப்பீட்டை போயிங் வழங்கியதுடன், ’737 மேக்ஸ்’ ரக விமானங்கள் அனைத்தையும் பறப்பதற்கு தடை விதித்தது.