பாகிஸ்தானில் மானிய விலையில் மாவு வாங்கச் சென்றவர் பலி
லாகூர்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சிந்து அரசு மானிய விலையில் மாவு விற்பனையை தொடங்கியுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் லாரிகளில் தலா 10 கிலோ எடையுள்ள மாவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மாவு ரூ.65க்கு விற்கப்பட்டது.
அதை வாங்க கூட்டம் அலைமோதியது. 40 வயதான ஹர்சிங் கோல்ஹி என்ற கூலித் தொழிலாளி கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளின் பசியை போக்க உணவுக்காக போராடிய தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.160 என்பது குறிப்பிடத்தக்கது.