‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பெண் சாமியார் மீது வழக்குப்பதிவு
கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியானது. படத்தைப் பார்த்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாத்வி பிராச்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண் சாமியார் சாத்வி பிராச்சி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண் சாமியார் சாத்வி பிராச்சி, ஜெய்ப்பூரில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான தியேட்டரில் நின்று கொண்டு மாற்று மதம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்குமாறு ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். அதன்படி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக பெண் சாமியார் சாத்வி பிராச்சி மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.