அதிக முறை டக் அவுட்… ரோஹித் சர்மாவுடன் போட்டி போடும் தினேஷ் கார்த்திக்
ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் என்ற சாதனைக்காக ரோஹித் சர்மாவும், தினேஷ் கார்த்திக்கும் போட்டியிடுகின்றனர். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆகி ரோஹித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்தார். ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களும் மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளன.
இந்த 5 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கடுமையாக போராடி வருகின்றன. நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குறிப்பாக அந்த அணியின் பிரபல வீரர்கள் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பெங்களூரு அணி சற்று குறைவான ஸ்கோரை எட்டியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஒரு காலத்தில் எதிரணி பவுலர்களை கலங்கடித்த தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியின் மூலம் 16 ஆவது முறையாக ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகியுள்ளார். இதே மோசமான சாதனையை ஏற்படுத்தியிருக்கும் இன்னொரு நபராக ரோஹித் சர்மா இருக்கிறார். இவரும் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் 15 முறை டக் அவுட் ஆனவர்களாக மன்தீப் சிங் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் உள்ளனர்.