தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி(கேழ்வரகு) வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இன்று தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்திற்கு மாதம் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் தேவைப்படும் இத்திட்டத்திற்காக மத்திய உணவுக் கழகத்திடம் இருந்து 1,350 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் இருப்பு உள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2.29 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் வினியோகிக்க போதுமான ராகி இல்லாததால், முதன்முறையாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
கூட்டுறவுத்துறை மூலம் சிறுதானியங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வேளாண் துறையுடன் இணைந்து சிறுதானிய கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.