மழையால் ரத்தான சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. சென்னை அணிக்கு மிக எளிதான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், க்ருனால் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
லக்னோ தொடக்க ஆட்டக்காரர்கள் மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். வோரா 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் இந்தப் போட்டியில் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கரண் சர்மா 9 ரன்களிலும், கேப்டன் க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதிரடி பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ 44 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
நிக்கோலஸ் பூரனுடன் இணைந்த ஆயுஷ் படோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ஒருநாள் போட்டி போல விளையாடியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். பூரன் 31 பந்துகளில் 20 ரன்களும், படோனி 33 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர்.
லக்னோ 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்பின் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 2வது இடத்துக்கும், சென்னை அணி 3வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன.