கொச்சி மாநகராட்சி ரூ.100 கோடி அபராதம்… தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பெரும்பாவூர்: எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி மாநகராட்சி பிரம்மபுரம் பகுதியில் திடக்கழிவு மையம் உள்ளது. இந்த மையத்தில் குவிந்திருந்த குப்பையில் கடந்த 6ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கொச்சி மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்தும் 12 நாட்களாகியும் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் அது அணைக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் தன் சொந்த முயற்சியில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கோயல், கொச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொச்சி மாநகராட்சி பொறுப்பேற்று ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அந்தத் தொகையை மாநில தலைமைச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். மேலும் கொச்சி மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் அனீல்குமார் கூறியதாவது: இந்த அபராத தொகையை மாநகராட்சியால் செலுத்த இயலாது.இதுகுறித்து சட்டப்படி மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.