பீகார்: நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை… டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்துக்கு பீகார் மாநில பட்டியல் சமூக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு காலநிர்ணயம் விதித்து எச்சரித்துள்ளது.
பீகார் எஸ்.சி ஆணையத்தின் துணைத் தலைவர் தேவேந்திர குமார் இதுகுறித்து கூறுகையில், “ பிரசாத்துக்கு பதிலளிக்க 15 நாட்கள் ஆணையம், அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் அவர் பதிலளிக்கவில்லையெனில், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. “ என்று தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஆர்.ஜெ.டி. கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 11ஆம் தேதி தனது 77வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக கடந்த 11ஆம் தேதி அவரை வாழ்த்தவும், அவரிடம் ஆசி வாங்கவும் அவரது கட்சி தொண்டர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது லாலு பிரசாத், நாற்காலியில் அமர்ந்தபடி, தனது கால்களை சோஃபா மீது நீட்டியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லி பரிசளிக்க அங்கு சென்ற நிர்வாகி ஒருவர் அம்பேத்கர் படத்தையும் கையில் எடுத்துச் சென்றிருந்தார். அப்படி எடுத்துச் சென்ற படத்தை நிர்வாகி லாலுவின் காலின் அருகே வைத்துள்ளார். பின்னர் லாலுவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் , விமர்சனங்களையும் பெற்றது.
இதனையடுத்து மாநில பட்டியலின சமூக ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பீகார் மாநில துணை முதலமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான சாம்ராத் சௌத்ரி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், “தலித்களுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் ஆணையம் புறக்கணித்துள்ளது. ஆனால் பாஜகவை எதிர்ப்பதால், நாங்கள் மிரட்டல் தந்திரங்களுக்கு ஆளாகிறோம்.
கடிதத்தில் பல இலக்கணப் பிழைகள் உள்ளன. திருத்தங்களுக்காக கடிதம் இரண்டு முறை திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் அறிந்தோம். ஆணையம் வரைவு எழுதி முடித்து முறையாக அனுப்பியவுடன் நாங்கள் தகுந்த முறையில் பதிலளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.