மோடியை விமர்சித்ததால் சிறை தண்டனைக்கு ஆளான இடத்திலே ‘ஜெய் பாரத் யாத்திரை’ துவங்குகிறார் ராகுல்
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சிறையில் அடைக்கப்பட்ட அதே கோலார் நகரில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 9ம் தேதி ஜெய் பாரத் யாத்திரையை தொடங்குகிறார்.
2019 லோக்சபா தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, லலித் மோடி மற்றும் நிரவ் மோடியை விமர்சித்தார்.
இதை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மோடியை விமர்சித்து சிறையில் அடைக்கப்பட்ட அதே கோலார் நகரில் ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.
வரும் 9ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து, 11ம் தேதி வயநாட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.