May 19, 2024

லியோ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: கர்நாடகாவில் வெளியாகுமா?

சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் லியோ படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்று ஒரு ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

லியோ படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் லியோ படம் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக தமிழகம் – கர்நாடகம் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவத்து எல்லையில் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் சித்தார்த் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தபோது, கன்னட அமைப்பினர் திடீரென தகராறில் ஈடுபட்டதால், சித்தார்த் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக கன்னட சூப்பர் ஸ்டார் சிவாராஜ்குமார் மன்னிப்பு கோரியிருந்தார். இதனிடையே வரும் அக்டோபர் 19ந் தேதி லியோ படம் வெளியாக உள்ள நிலையில், கன்னடத்திலும் லியோ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெடித்து வரும் போராட்டத்தினால் லியோ படம் அங்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!