கர்நாடக தேர்தல் முடிவுகள் | இந்த வெற்றி லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது: எடியூரப்பா நம்பிக்கை
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. 12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி – 135, பாஜக – 63, மஜத – 22, மற்றவர்கள் – 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், கர்நாடகா மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி மக்களவை தேர்தலில் எதிரொலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் முடிவுகளை பார்த்து பாஜகவினர் பீதியடைய வேண்டாம். பாஜகவுக்கு வெற்றி தோல்வி புதிதல்ல. இதற்கு முன்னரும் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளோம். கட்சியின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்.
பாஜகவை புறக்கணிக்கக் கூடாது. இன்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு கட்சி வளர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகள் எனக்கு தனிப்பட்ட வருத்தத்தை அளித்தாலும், மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம். காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.