புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை சட்டத்தின் முன் நிறுத்த, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ‘ஸ்கை நியூஸ்’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நீண்டகாலமாக பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து வருவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடந்த 30 ஆண்டுகளாக இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம். இதையடுத்து ஐ.நா.வில் இந்தியா இந்த விவகாரத்தை எழுப்பியது. இதுபற்றி ஐ.நா.வுக்கான துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல் பேசுகையில், “இந்த வெளிப்படையான வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.
உலக பயங்கரவாதத்தை தூண்டி, பிராந்தியத்தை சீர்குலைக்கும் ஒரு முரட்டு நாடாக பாகிஸ்தானை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதற்காக பாகிஸ்தான் பிரதிநிதி ஒருவர் சர்வதேச மன்றத்தை மீண்டும் தவறாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் உண்மை இப்போது தெளிவாகிவிட்டது” என்றார். இந்நிலையில், கவாஜா ஆசிப்பின் ‘எக்ஸ்’ சமூக வலைதள கணக்கை இந்தியாவில் உள்ள மத்திய அரசு நேற்று முடக்கியுள்ளது.