வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பை நிறுத்திவைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என கோர்ட் கூறியுள்ளது.
உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முறையிடப்பட்டது. வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. மேலும், வரி விதிப்பை நிறுத்தி வைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த வழக்குகளில் உள்ள வாதங்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.