திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டீஸ்வரர் மற்றும் வீரராகவ விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பல ஆண்டுகளாக எந்த பூஜைகளும் நடத்தப்படாமல் மூடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘பூஜைகள் நடத்த வசதிகள் இல்லாத கோயில்களில், தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் 17,000 கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டத்தின் கீழ், மூடப்பட்ட திண்டீஸ்வரர் கோயிலைத் திறக்க வேண்டும், நிர்வாகிகளை நியமிக்க வேண்டும், அறநிலையத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பூஜையாவது நடத்த உத்தரவிட வேண்டும்.’ இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூடப்பட்ட அலங்கியம் திண்டீஸ்வரர் கோயிலைத் திறந்து தினசரி பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, “மூடிய கோயில்களைத் திறந்து தினமும் குறைந்தது ஒரு பூஜையாவது நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோள். எனவே, மூடப்பட்ட கோயில்களைத் திறந்து குறைந்தபட்சம் ஒரு பூஜையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜை நேரங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும்” என்று கூறி, அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.