டெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் தோன்றிய 25 பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது தெலுங்கானா மாநில காவல் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.