சேலம்: மேட்டூர் அணை நீர் வரத்து 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வந்தது. மேட்டூர் அணையின் 92 ஆண்டு வரலாற்றில் 44-வது ஆண்டாகவும், ஜூன் மாதத்தில் 66 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாகவும், கடந்த 29-ம் தேதி முழுமையாக நிரம்பியது, 120 அடியை எட்டியது.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 31,500 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 18,615 கன அடியாகக் குறைந்தது. இந்நிலையில், இன்று அணைக்கு நீர்வரத்து 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து 24,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 22,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.