சென்னை: நான் சோஷியல் மீடியா-ல இருந்து விலகறதுக்கு காரணம் நடிகர் ஸ்ரீ தான் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
இதுவரை வெளியான சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: “நடிகர் ஸ்ரீ தற்பொழுது நலமாக சந்தோஷமாக இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வீடியோ கால் செய்து அவன் எழுதிய புத்தகத்தை வெளியிட போகிறேன் என கூறினான். நானும் எஸ்.ஆர் பிரபுவும் ஸ்ரீயை கவனிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் நிறைய குற்றச்சாட்டு எழும்பியது. இதனால் தான் நான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேன்.” என கூறியுள்ளார்.