சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த தரைவழி காற்று வீச வாய்ப்புள்ளது. 30 மற்றும் 31-ம் தேதிகளில் சில இடங்களிலும், ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், சில நேரங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, சின்கோனா, ஆனைமலை, தொண்டாமுத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், தென்காசி மாவட்டம் குண்டாறு அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன். செருமுள்ளி, மேல் பவானி மற்றும் பார்வூட் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.