மேட்டூர் / தர்மபுரி: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 7,769 கன அடியாகவும், நேற்று காலை 7,591 கன அடியாகவும் இருந்த மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று மாலை 12,614 கன அடியாக அதிகரித்தது.
டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாகவும், நீர் இருப்பு 91.41 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கால் காவிரியில் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 8,000 கன அடியாக பதிவான நீர்வரத்து, நேற்று காலை 9,500 கன அடியாகவும், மதியம் 1 மணிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.