சென்னை: சென்னையில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
இந்த இடங்களில் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பெய்தது. மந்தைவெளி பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்ப சலனம் தான் காரணம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது.

இதன் காரணமாக, சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று வேலை நாள் என்பதால், வேலைக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்வோர் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த சூழ்நிலையில், இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.