புதுடில்லி: அமெரிக்காவின் வரி அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு என பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா பாராட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிஜி பிரதமர் ரபுகா, பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் உலக விவகார கவுன்சில் (ICWA) ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், “அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் உறவுகளை பாதிக்கின்றன. சமீபத்திய வரி அறிவிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். யாரோ ஒருவர் உங்களை மகிழ்ச்சியடையாமல் இருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட அழுத்தங்களை தாங்கும் வல்லமை மோடிக்கு உண்டு” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினார்.