புது டெல்லி: சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டங்களை கட்டாயமாக்கும் வரைவு வழிகாட்டுதல்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பு அமைச்சகத்தால் நிலையான இயக்க நடைமுறைகள் (SOPs) தயாரிக்கப்பட்டுள்ளன. வரைவு வழிகாட்டுதல்கள் கடந்த மாதம் பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டன.
வழிகாட்டுதல்கள், “சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணுதல், உடனடி மருத்துவ பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் நீண்டகால சமூக ஒருங்கிணைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அனைத்து புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் தொடர்புடைய இந்திய சாலை காங்கிரஸ் குறியீடுகளுக்கு இணங்க வேண்டும்” என்று கூறுகின்றன.

இதில் தொட்டுணரக்கூடிய நடைபாதைகள், சாய்வுப் பாதைகள், அணுகக்கூடிய குறுக்குவெட்டுகள், கேட்கக்கூடிய சிக்னல்கள், தாழ்வான தள பேருந்துகள் மற்றும் முன்னுரிமை இருக்கைகள் ஆகியவை அடங்கும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழக்கமான தணிக்கைகளை நடத்த வேண்டும். மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகள் போன்ற மாற்றுத்திறனாளிகள் அதிக அடர்த்தி கொண்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
பொதுப் போக்குவரத்து மற்றும் செயலி அடிப்படையிலான டாக்சிகள் அணுகல் தரநிலைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயமாகும். மாற்றுத்திறனாளி உதவித் திட்டம் மற்றும் தொடர்புடைய மாநிலத் திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கைகால்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் கேட்கும் கருவிகள் போன்ற உதவி சாதனங்கள் வழங்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.