தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே அக்டோபர் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அக்டோபர் 16 முதல் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இன்று 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் மற்றும் பிற இடங்களில் இருந்து 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல், தீபாவளிக்கு மறுநாள் 25 சிறப்பு ரயில்களும், 22-ம் தேதி 19 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.