பூடான்: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் வந்துள்ளார். பூட்டான் மன்னரின் 70-வது பிறந்த நாள் விழாவல் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி. சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
சதிச்செயலின் வேர் வரை சென்று விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடிப்போம். கார் வெடி சம்பவத்தில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுடன் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், நமது முன்னோர்களின் உத்வேகம் வசுதைவ குடும்பகம், அதாவது உலகம் முழுவதும் ஒரே குடும்பம்… இந்த உணர்வுகளுடன், பூட்டானில் நடைபெறும் இந்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.