கேரளா: மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை அடுத்து இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுத்து பாலிவுட்வரை திரும்பிப்பார்க்க வைத்திருந்தார்
படத்தின் இயக்குநரான சிதம்பரம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை அடுத்து இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் உருவாகி தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன் உட்பட பலரும் படத்தை பார்த்துவிட்டு, ஒட்டு மொத்த டீமையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த படைப்பு எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் இயக்குநர் சிதம்பரம் அடுத்து ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘ஆவேசம்’ ஜித்து மாதவன் எழுதியுள்ளார். தமிழில் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்து வரும் கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) ‘பாலன்’ படத்தின் பூஜை எளிமையான முறையில் தொடங்கியதுடன், படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்றது. சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. ‘பாலன்’ வட்டாரத்தில் படம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்.
” ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போலவே இந்த படமும் காமெடி த்ரில்லர். ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை என்றும் சிறுவன் கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்றும் சொல்கிறார்கள். புதுமுகங்கள்தான் இதிலும் கதை மாந்தர்களாக வருகின்றனர். புதுமுகங்கள் அனைவரையுமே ஆடிஷன் வைத்துத் தேர்வு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம், ஆலப்புழா, வயநாடு என கேரளாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் வயநாட்டில் மட்டும் 60 நாட்களுக்கு மேல் நடந்துள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது கே.வி.என் நிறுவனம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஷைஜூ காலித் ஒளிப்பதிப்பும், சுஷின் ஷியாம் இசையையும் கவனம் ஈர்க்கும். படத்தொகுப்புப் பணிகளை விவேக் ஹர்ஷன் கவனித்துள்ளனர். வரும் கோடை விருந்தாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்”.