மகாராஷ்டிரா: மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைக்கிராமம் போர்டி. சுத்தமான கடற்கரை இயற்கை எழில் மிகுந்து காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும் கொண்டிருப்பதைக் காணலாம். கறுப்பு நிறத்தில் பிசுபிசுப்பு தன்மையுடன் மணல் இங்கு காணப்படுகிறது.
சப்போட்டா மரங்கள் கடற்கரையை ஒட்டியே வரிசையாக அமைந்திருப்பது இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒரு முக்கிய அம்சமாக இந்த கடற்கரையில் கடலின் ஆழம் இடுப்பளவு வரை மட்டுமே இருப்பதால் நீரில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் ஏற்ற விதத்தில் உள்ளது. மும்பை பெருநகரத்திலிருந்து 153 கி.மீ தூரத்திலேயே இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது.
அதிகம் கூட்டம் இல்லாத அதிகம் அறியப்படாத இடம் என்பதால் இந்த கடற்கரை இயற்கை வனப்பு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. ஒரு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணி எதிர்பார்க்கும் எல்லா சுற்றுலா அம்சங்களையும் இந்த போர்டி கடற்கரை நகரம் பெற்றுள்ளது. தனக்கேயுரிய இயற்கை எழில் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போர்டி கடற்கரை வெயில் காய்வதற்கும் சப்போட்டா தோப்புகளில் ரசனையுடன் காலாற நடப்பதற்கும் அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் அமைதியாக நேரத்தைக்கடத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.
உல்லாச நடைபயணத்துக்கு ஏற்றதாகவும் அத்துடன் குதிரைச்சவாரி செல்வதற்கும் உகந்த இடமாக உள்ளது. போர்டி பகுதியில் பெரும்பான்மையாக கனிவான குணத்தைக்கொண்ட பார்ஸி இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் சிறப்பான உள்ளூர் உணவு வகைகளையும் தற்காலிக தங்கும் வசதிக்காக வீடுகளையும் பயணிகளுக்கு அளிக்கின்றனர்.
பெருநகரமான மும்பைக்கு மிக அருகிலேயே அமைந்திருப்பதால் போர்டி கடற்கரையானது விமானம், ரயில், சாலை போன்ற எல்லா போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாகவும் எளிதில் சென்றடையும் வசதியுடன் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. ரயிலில் செல்வதென்றால் தஹானு ரயில் நிலையம் போர்டிக்கு அருகில் உள்ளது. சாலை மார்க்கமாக இங்கு வருவதற்கு மும்பையிலிருந்து அரசுப்போக்குவரத்து பேருந்துகளும் தனியார் சுற்றுலா பேருந்துகளும் அதிக அளவின் கிடைக்கின்றன. சுலபமான போக்குவரத்து வசதிகள் மற்றும் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் அம்சங்களுடன் விளங்கும் இந்த போர்டி கடற்கரை ஸ்தலம் வார விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்கேற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.