சென்னை: சுற்றிப்பார்த்த முதலமைச்சர்… தலைமைச் செயலகத்தை, பேட்டரி காரில் சென்று, முதல்வர் விஜய் சுற்றிப் பார்த்தார்.
முதல்வராக பதவியேற்ற பின், விஜய் தினமும் காலை 9:30 மணியிலிருந்து, 10 மணிக்குள் தலைமைச் செயலகம் வந்து, தன் பணிகளை மேற்கொள்கிறார். மாலை 4:00 மணியில் இருந்து, 6:00 மணிக்குள், வீட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். கடந்த 12 நாட்களாக, தன் அறை, ஆலோசனை கூட்டரங்கு, அமைச்சர்கள் அலுவலகம் ஆகியவற்றுக்கு மட்டுமே முதல்வர் சென்றார்.
மூன்று நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்திலும் பங்கேற்றார். இந்நிலையில் நேற்று, தலைமை செயலகத்தை சுற்றிப் பார்க்க முதல்வர் விரும்பினார். இதற்காக, பேட்டரி கார் வரவழைக்கப்பட்டது. அதில் டிரைவர் இருக்கை அருகில் அமர்ந்து, தலைமை செயலக வளாகத்தை சுற்றி வந்தார். அங்குள்ள பழமையான சர்ச்சுக்கு சென்றார்.
அதன்பின் கோட்டை அருங்காட்சியகம் சென்று, அங்குள்ள பொருட்களை பார்வையிட்டார். பின், நாமக்கல் கவிஞர் மாளிகை வழியாக, தன் அறைக்கு திரும்பினார். முதல்வரை காண, பணியாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளும் ஆர்வம் காட்டினர்.