சென்னை: அருமையான சுவையில் காலிஃப்ளவர் சாதம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காலிஃப்ளவர் சாதம் சுவையான மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கு ஏற்ற சாதம். காலிஃப்ளவர் சாதம் பலவிதமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 250 கிராம்
மைதா- 3 தேக்கரண்டி
கான்பிளவர்/சோள மாவு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை: காலிஃப்ளவரை சிறிது சிறிதாக நறுக்கி 2 நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைத்து பின்னர் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதனுடன் மூன்று தேக்கரண்டி மைதா மற்றும் 2 தேக்கரண்டி சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரைத்தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு பொறிக்கவும் அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும். காலிபிளவர் நன்கு பொரிந்து மொறுமொறுப்பாக ஆனதும் தனியே எடுத்து வைக்கவும்.
காலிஃப்ளவர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3 ( நடுவில் கீறியது)
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
தக்காளி – 1
1 கப் அரிசியில் உதிராக வடித்த சாதம்
செய்முறை: காலிஃப்ளவர் சாதம் செய்வதற்கு ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மென்மையாக வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் ஒரு தேக்கரண்டி மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பின்னர் ஒரு பெரிய சைஸ் தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். வதங்கிய பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு கப் அரிசியில் உதிர் உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்.
சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். இப்பொழுது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்துக்கொள்ளவும் அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்த பின்னர் சூடாக பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சாதம் தயார் .