புதுடில்லி: ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்ரித் உத்யான் தோட்டத்தின் 2026-ம் ஆண்டுக்கான கோடை மலர் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்து, வண்ணமயமாக பூத்துக் குலுங்கும் மலர்களை பார்வையிட்டார்.
ராஷ்டிரபதி பவனின் வளாகத்தில் அமைந்துள்ள அம்ரித் உத்யான், டெல்லியின் முக்கிய சுற்றுலா மற்றும் இயற்கை ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த முறை பூர்வீக மற்றும் உள்ளூர் மலர்ச்செடிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பால்சம், குல்-மெஹந்தி, அபராஜிதா, ருக்மிணி, பர்ஷா பூல், லால் சாக், நாக்பானா உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மலர் பாரம்பரியத்தையும் பல்லுயிர் வளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்ரித் உத்யான் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். மாலை 5 மணிக்கு பிறகு நுழைவுக்கான பதிவு நிறுத்தப்படும். தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோட்டம் மூடப்படும்.
பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம். ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கும் சிறப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
