மும்பை: இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆழ்கடல் மீட்பு மற்றும் டைவிங் ஆதரவுக் கப்பலான ‘ஐ.என்.எஸ். நிபுன்’ நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது.
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் முன்னிலையில் ஐ.என்.எஸ். நிபுன் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உலகில் சில நாடுகளின் கடற்படைகளிடம் மட்டுமே இதுபோன்ற ஆழ்கடல் மீட்பு கப்பல்கள் உள்ளன. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் இந்தக் கப்பலை தயாரித்துள்ளது.
சுமார் 80 சதவீத உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதே வகையைச் சேர்ந்த ‘ஐ.என்.எஸ். நிஸ்தார்’ கப்பல் கடந்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.
விபத்தில் சிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்பதில் ஐ.என்.எஸ். நிபுன் முக்கிய பங்காற்றும். மேலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 984 அடி ஆழம் வரை கடற்படை வீரர்கள் சென்று பணிகளை மேற்கொள்ளும் வகையில் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் நேரடியாக செல்ல முடியாத ஆழமான கடற்பகுதிகளுக்கு ரிமோட் மூலம் இயங்கும் ரோபோடிக் கருவிகளை அனுப்பி தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் திறனும் இந்தக் கப்பலுக்கு உள்ளது.
சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கடலில் சிக்கியவர்களை மீட்பதுடன், பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.
