சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சியின் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திட்டம் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள கொரட்டூர் கிழக்கு அவென்யூ பகுதியில் தொடங்குகிறது.
சுமார் 2.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த மழைநீர் வடிகால், சென்னை–திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் பாடி மேம்பாலம் பகுதி வழியாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1.90 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 600 மீட்டர் நீளத்திற்கு தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பாடி மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மீதமுள்ள பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பருவமழை காலங்களில் பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு, சாலைகளில் ஏற்படும் நீர்தேக்கம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
