கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான நீண்டகால போரை சமாளிக்க கூடுதல் வருவாயை திரட்டும் நோக்கில், ஆபாச தொழிலை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைப்பதுடன், தற்போது மறைமுகமாக நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என இதனை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிகரிக்கும் பொருளாதார சுமை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டாலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்த மோதல் இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் ராணுவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசுக்கு புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்
தற்போது உக்ரைனில் ஆபாச படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது மற்றும் வைத்திருப்பது சட்டவிரோத செயல்களாக கருதப்படுகின்றன. இதற்காக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் சட்டமும் நடைமுறையில் உள்ளது.
இருப்பினும், இணையதளங்கள் மற்றும் வெளிநாட்டு தளங்கள் வழியாக இந்தத் தொழில் மறைமுகமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காமல் போவதுடன், இந்த துறையில் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் மசோதா
உக்ரைன் நாடாளுமன்ற நிதிக் குழு தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், ஆபாச தொழிலை சட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.
இதுதொடர்பான மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் ஆதரவு பெற்றதாகவும், தற்போது அடுத்த கட்ட பரிசீலனைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.25 மில்லியன் டாலர் வரை வருவாய்?
இந்த தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு முறையான வரி விதிக்கப்பட்டால், ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கலாம் என ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்புத் தேவைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு இது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலை கட்டுப்படுத்தும் முயற்சி
தற்போது பெயரளவில் தடை இருந்தாலும், இந்தத் துறையில் மிகப்பெரிய மறைமுக சந்தை இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள், சட்டவிரோத செயல்பாடுகள் மற்றும் ஊழல் அதிகரிப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான அமைப்பு தேவைப்படுவதாகவும் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், உக்ரைன் அரசு சமீபத்தில் பிரபலமான ஒரு ஆபாச இணையதளத்திடம் இருந்து சில தரவுகளை பெற்றதாக கூறப்படுகிறது. அந்தத் தகவலின்படி, 2023-ம் ஆண்டில் மட்டும் உக்ரைனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அந்த இணையதளத்தின் மூலம் கோடிக்கணக்கான டாலர் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய சட்ட சூழ்நிலையில் அந்த வருமானத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக பலர் அதை வெளிப்படுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும் என்றாலும், இதற்கு சமூக ரீதியாக எதிர்ப்புகள் எழுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் அரசுக்குள் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது சட்டவிரோதமாக நடைபெறும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, அவற்றை ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
