சென்னை: குற்ற வழக்குகளில் ஒருவரை கைது செய்யும்போது அரசியலமைப்புச் சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த ‘ஃபிட்ஜி’ தனியார் கல்விப் பயிற்சி மையங்கள் கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன. இதையடுத்து, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்று 533 பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார்களின் அடிப்படையில், ரூ.10.63 கோடி மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் தமிழக நிர்வாக பங்குதாரரான அங்குர் குமார் ஜெயினை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து, அங்குர் குமார் ஜெயினுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் ஆர்.அஸ்வின் ஆகியோர், மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றும், அவரது செயற்கைக் கால் சேதமடைந்துள்ளதால் சிறையில் நடமாட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி ஜாமீன் வழங்க கோரினர். இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாகவும், இயந்திரத்தனமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒருவரை கைது செய்யும்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1)-ன்படி பின்பற்ற வேண்டிய கட்டாய நடைமுறைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
