சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி, தொண்டையில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ‘ப்ளூ’ வைரஸ்களால் பரவும் காய்ச்சல், டெங்கு மற்றும் நுரையீரல் தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், காய்ச்சல் டிசம்பர் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்குவதற்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், ‘டெங்கு, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு, 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். இதுவரை 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்,” என்றார்.