
ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், படத்திற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
‘புஷ்பா 1: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஃபஹத் பாசில் வில்லனாக அசுரத்தனமான போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

‘புஷ்பா 2’ படத்தை புறக்கணிக்கிறேன் என்ற பேச்சுக்கு மத்தியில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜுன் பேசியதாவது:- இப்போது நான் அல்லு அர்ஜுன் அல்ல, உங்கள் மல்லு அர்ஜுன். கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் நானும், ஃபஹத் ஃபாசிலும் ஒரே மேடையில் நின்றிருந்தால், அது மிகப்பெரிய தருணமாக இருந்திருக்கும்.
இந்த மேடையில் ஃபஹத் பாசிலை மிஸ் செய்கிறேன். ஆனால் கேரள ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் என் அண்ணன் ஃபஹத் பாசில் அற்புதமாக நடித்திருக்கிறார். அது அவருக்கு உலகம் முழுவதும் அதிக புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். ஃபஹத் பாசில் கேரள சினிமாவை உலக அரங்கில் பெருமைப்படுத்துவார்.