கோலாலம்பூர்: ஜூனியர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. 2023-ம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து, 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை தொடர் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி கோலாலம்பூரில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீக் வான் வூர்ஸ்ட் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் த்ரிஷா கொங்காடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக த்ரிஷா கொங்காடி 44 ரன்களும், சானிகா சால்கே 26 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் டி20 உலக கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.