சென்னை: அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நேற்று தமிழகம் முழுவதும் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்தியது. அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற போராட்டத்தில் 64 துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
ஆர்ப்பாட்டத்திற்கு அந்தந்த மாவட்ட சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர்கள் வை.சிவக்குமார், ஆ.கோபிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொருளாளர் சா.டேனியல் ஜெய்சிங் தலைமை வகித்தார். போராட்டம் குறித்து மாவட்டச் செயலர் த.முத்துக்குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்துவோம் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்துவிட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்காக ஒரு குழுவை அமைப்பது அரசு ஊழியர்களின் முதுகில் குத்தியதாகும். சாமானிய மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்றிய அரசு ஊழியர்களை அரசு நடத்த முடியாது என்று எச்சரிக்கிறோம். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
இதற்கு அரசு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் பிப்ரவரி 25-ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால் மார்ச் 19-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும். அதற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாலுகா அலுவலகம் முன்பும் அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மற்ற மாவட்டங்களிலும் சங்கத்தின் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் தலைமையில் 24 மணி நேரமும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.